ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நிகழும் அதிசயக் காட்சி

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் சந்திரன் உதிக்கும் காட்சியைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி சர்வதேச சுற்றுலாத் தலமாகவும், ஆன்மிகத் தலமாகவும் விளங்குகிறது கன்னியாகுமரி. சாதாரண சமயங்களைவிட, சபரிமலை சீசன் மற்றும் கோடை விடுமுறைக் காலங்களில், சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் அதிகமாக இருக்கும். முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, கடற்கரையில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலில் தரிசிக்கவும் ஆன்மீக அன்பர்கள் கூடுவார்கள். மேலும், கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை போன்றவற்றைப் படகில் சென்று காண, கூட்டம் அலைமோதும். அதுமட்டுமல்லாது, அதிகாலையில் சூரிய உதயம் மற்றும் மாலையில் சூரியன் மறையும் காட்சியைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கன்னியாகுமரிக்கு வருகிறார்கள். சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு அடுத்தபடியாக கன்னியாகுமரியில் சூரியன் மறையும் காட்சி மற்றும் சந்திரன் உதயமாகும் காட்சி ஆகியவற்றை ஒரே நேரத்தில் கண்டுகளிக்க முடியும். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் இந்த அபூர்வக் காட்சியைக் காண பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இன்று மாலை கன்னியாகுமரியில் குவிந்தனர். சூரியன் மறையும் தருணத்தில், விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு நடுவே உதயமான முழு நிலவைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கு முந்தைய ஆண்டுகளில், சில சமயம் சந்திர உதயத்தை காணமுடியாமல் மேக மூட்டம் மறைக்கும். இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைவதுண்டு. ஆனால், இன்று மேக மூட்டம் இல்லாததால் சித்திரை முழுநிலவை முழுமையாகக் கண்டு ரசிக்க முடிந்தது. சித்திரை நிலவைக் கண்டு ரசிக்க, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.

Comments