குற்றால அருவிகள் என மொத்தம் ஒன்பது அருவிகள் காணப்படுகின்றன.
பேரருவி
1. பேரருவி - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.
2. சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.
3. செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
4. தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பதற்கு தடைக்காலம் அவ்வப்போது பிறப்பிக்கப்படும். தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
5. ஐந்தருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க இரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.
6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்) - இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு. தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அருவி செல்லும் பகுதி தோட்டக்கலைத்துறையினரால் இயற்கைப் பூங்காவாக உருவாக்கப்பட்டு பொதுமக்கள் சிறுவர் பொழுது போக்கு இடமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு தோட்டக்கலைத் துறையினரால் பூஞ்செடிகளும், மரக் கன்றுகளும் விற்கப்படுகின்றன.
7. புலியருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. சிறுவர்கள் குளிக்க புலி அருவி மிகவும் பாதுகாப்பானது.
பழைய குற்றாலம் அருவி
8. பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது.
9. பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது. இது ஆற்றின் தொடக்கமே ஆனாலும் மக்களால் அருவி என்றே அழைக்கப்படுகிறது.தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
10. கண்ணுப்புளி மெட்டு - இது செங்கோட்டை தாலுகா அலுவலகத்திலிருந்து மேற்கு திசையில் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள குண்டாறு நீர் தேக்கத்தின் மேலமைந்துள்ளது.
Comments
Post a Comment